சீர்காழி நகராட்சி பகுதியில் சுகாதாரப் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
சீர்காழி நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையொட்டி நடைபெறும் சுகாதாரப் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன் ஆய்வு செய்தார்.
சீர்காழி ஈசானியத் தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள கட்டண கழிப்பிடம் மற்றும் அப்பகுதியைச் சுற்றி கழிவுநீர் தேங்கியிருந்ததைக் கண்டு நகராட்சி துப்புரவு அலுவலர்களை எச்சரித்தார். மேலும், உடனடியாக கழிவுநீரை அப்புறப்படுத்தி, சுகாதாரமாகப் பராமரிக்க அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து பழைய பேருந்து நிலையம், புழுகாப்பேட்டைதெரு, சுவாமிநாதசெட்டித்தெரு, ரயிலடி தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, நகராட்சி ஆணையர் அஜிதாபர்வினிடம் பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, வட்டாட்சியர் பாலமுருகன், துப்புரவு ஆய்வாளர் பாலசுப்ரமணியன், உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் சென்றனர்.