நாகை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில், டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நாகை புதிய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகை வருவாய்க் கோட்டாட்சியர் எம். கண்ணன் தலைமை வகித்து, டெங்கு காய்ச்சலைத் தடுக்க தனிநபர்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளக்கிப் பேசினார்.
உணவுப் பாதுகாப்புப் பிரிவு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஆர்.வி. ரவி, டெங்கு காய்ச்சல் பரவும் முறைகள் மற்றும் அறிகுறிகளை விளக்கி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சுய மருத்துவத்தில் ஈடுபடாமல் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகுமாறு கேட்டுக்கொண்டார். முன்னதாக, பேருந்து பயணிகள், பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு, டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ஆர். மகேந்திரன், தேசிய மருத்துவத் திட்ட மாவட்ட பொறுப்பு அலுவலர் டாக்டர் ஆர். ராஜா, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநரக கண்காணிப்பாளர் சி. வாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன் வரவேற்றார். வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆர். மஹாராஜன் நன்றி கூறினார்.