டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், பொதுமக்கள் தங்கள் வசிப்பிடத்தின் சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்தார்.
நாகை, மகாலட்சுமி நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற டெங்கு நோய்த் தடுப்பு தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர், மேலும் தெரிவித்தது:
பொதுமக்கள் தங்கள் வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் தூய்மையை பராமரிக்க வேண்டும். யாருக்கேனும் காய்ச்சல் பாதிப்பு இருந்தால், அவர்களை உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும். தண்ணீர் சேமிக்கும் தொட்டிகளை வாரம் ஒரு முறை சாம்பல், பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றைக் கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களினுள் கொசு புகாமல் தடுக்க, பாத்திரத்தை மூடி வைத்துப் பராமரிக்க வேண்டும். டெங்கு நோய் பரவாமல் தடுக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் ஆட்சியர் சீ. சுரேஷ்குமார்.
ஆய்வின்போது, நாகை நகராட்சி ஆணையர் ஜான்சன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.