வறட்சியால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட விவசாயிகளுக்கு செப். 18-ஆம் தேதிக்குள் பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை வழங்காவிட்டால், மாவட்ட அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் அவசரக் கூட்டம், நாகையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு மாநிலப் பொருளாளர் எஸ். ஸ்ரீதர் தலைமை வகித்தார். தமிழக காவிரி விவசாயிகள் சங்கச் செயலாளர் எஸ். ராமதாஸ் முன்னிலை வகித்தார். சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
100 சதவீதம் வறட்சி பாதிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, பயிர்க் காப்பீடு நிறுவனம், நாகை மாவட்டத்தின் அனைத்துப் பகுதி விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி 100 சதவீத இழப்பீடு வழங்க வலியுறுத்துவது. விவசாயப் பிரதிநிதிகளின் ஆலோசனையின்றி, காவிரி புஷ்கரத்துக்காக மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டிப்பது.
செப். 18-ஆம் தேதிக்குள், பயிர்க் காப்பீட்டு நிறுவனம் நாகை மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீத காப்பீடு இழப்பீட்டை வழங்காவிட்டால், செப். 19-ஆம் தேதி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.