இறைவழியைப் பின்பற்றி நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ்விக்க வேண்டும் என தருமையாதீன 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கரம் விழா செப். 12-இல் தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் 5-ஆம் நாளான சனிக்கிழமை இரவு, சிறப்பு நிகழ்ச்சியாக தருமையாதீனம் குருமகா சந்நிதானத்துக்கு புஷ்பாஞ்சலி மற்றும் பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் எழுந்தருளிய தருமையாதீன குருமகா சந்நிதானம் தனது ஆசியுரையில் கூறியது: பொன்னி நதியான காவிரியை நாம் அனைவரும் போற்றிப் பாதுகாக்க வேண்டும். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காவிரி மகா புஷ்கரம் விழாவில் பங்கேற்கும் பாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது.
நமது நாட்டை ஆட்சி செய்த முன்னோர்கள் காவிரியைப் போற்றி பாதுகாத்துள்ளனர். அதேபோல், நாமும் நதிகளைப் பாதுகாக்க வேண்டும். நாட்டை ஆளக்கூடியவர்கள் ஆன்மிகப் பற்றுள்ளவர்களாக இருக்க வேண்டும். சர்தார் வல்லபபாய் படேல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்கள் எல்லாம் நாட்டை மீட்பதற்கு போராடினார்கள். ஆனால், அறவழியில் போராடியும், பஜனைப் பாடியும் மகாத்மா காந்தி நமது நாட்டை நமக்கு மீட்டுத் தந்தார். இலங்கையில் லட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதனை செய்தவருக்கு என்னப் பயன் கிடைத்துள்ளது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆன்மிக வழியைப் பின்பற்றுகிறார். மக்கள் நாட்டை காக்க முன்வர வேண்டும். இறைவழியைப் பின்பற்றி நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ்விக்க வேண்டும் என்றார் அவர்.