நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அடகு கடையின் பூட்டை உடைத்து பெட்டகத்துடன் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.
வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு மேலக்காடு, பட்டுக்கோட்டை பிரதான சாலை பகுதியில் வசிப்பவர் என். ராதாகிருஷ்ணன் (65). இவர், தனது வீட்டின் பக்கவாட்டில் உள்ள கட்டடத்தில் அடகு கடை நடத்தி வருகிறார்.
சனிக்கிழமை இரவு வழக்கமான அலுவல்களை முடித்துக்கொண்டு கடையை மூடினாராம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் பார்த்தபோது கடையின் கதவுகளில் இருந்த 5 பூட்டுகளும் உடைக்கப்பட்டு, நகைகளை பாதுகாக்கும் பெட்டகம் நகைகளுடன் திருட்டுப்போனது தெரிய வந்தது. பெட்டகத்துக்குள் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கடைக்குள் மர்ம நபர்கள் பூட்டுகளை உடைக்க பயன்படுத்திய கம்பி, தீப்பெட்டி போன்றவை கிடந்தன.
3 கடைகளில் திருட முயற்சி: அதேபகுதியில், தெட்சிணாமூர்த்திக்குச் (64) சொந்தமான உரக்கடை, அண்ணாப்பேட்டை ராஜன்கட்டளை பகுதியில் உள்ள பூபதிக்கு சொந்தமான மளிகை கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திருட முயற்சி நடந்திருப்பதும் தெரிய வந்தது.
இதேபோல், தங்கராசு (60) என்பவருக்குச் சொந்தமான அடகு கடையில் மர்ம நபர் ஒருவர் இரவு 1.12-க்கு திருட முயன்ற காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
தகவலின்பேரில், வேதாரண்யம் துணைக் காவல் கண்காணிப்பாளர் அரசு மற்றும் வாய்மேடு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.தடயவியல் நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து வாய்மேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.