சுவாமி தயானந்த சரஸ்வதியின் இரண்டாமாண்டு நினைவஞ்சலி குடவாசல் அருகேயுள்ள மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வர் கனகசபேசன் சுவாமி தயானந்த சரஸ்வதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பேசுகையில், சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது கடின உழைப்பாலும் முயற்சியாலும் உலகம் போற்றும் ஆன்மிக குருவாக விளங்கி சனாதன தர்மத்தை உலகிற்கு எடுத்துக் கூறியவர் சுவாமி தயானந்தா. அவரது போதனைகளும் சமூகப் பணிகளும் மறக்க முடியாதவை.
அவரால் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் கல்வி அறிவைப் பெற்றுள்ளனர். வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர். பாரதப் பண்பாடும் கலாசாரமும் சுவாமியால் உலகம் முழுவதும் பரவியுள்ளது. பாரத நாட்டிற்குப் பெருமையைத் தேடித் தந்தவர் சுவாமிஜி. ஆகையால் இன்றைய இளைஞர்கள் சுவாமிஜியைப் போல் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சென்னை ராணி மேரி கல்லூரியின் இசைத்துறைப் பேராசிரியர் பாகீரதி மற்றும் ஹரிணி ஆகியோரின் இசை ரசனை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஹேமா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ -மாணவிகள் மலர் அஞ்சலி செலுத்தினர்.