தமிழகத்தில் ஆங்காங்கே போராடி வரும் போராட்டக் குழுக்கள் ஒருங்கிணைக்கப்படும் என, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் சு.ப. உதயகுமார் தெரிவித்தார்.
நாகூருக்கு சனிக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் கதிராமங்கலம், நெடுவாசல் என பல்வேறு இடங்களில் தனித்தனியாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. தனித்தனி போராட்டங்களால் கோரிக்கைகள் உரிய முறையில் அரசுக்கு சென்று சேர்வதில்லை. எனவே, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் குழுக்களை ஒருங்கிணைத்து கூட்டமைப்பாக உருவாக்கப்படும்.
தற்போதுவரை 30 போராட்டக் குழுக்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் ஒன்றிணைந்து வலுவுள்ள போராட்டமாக, தேவைப்படும் இடங்களில் நடத்தும். இதேபோல், போராட்டம் காரணமாக சிறை செல்பவர்களுக்கு சட்ட ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த குழுவினர் உதவிகள் செய்வர்.
காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி காரணமாக பாதிப்பு ஏற்படுவதை எதிர்த்து விரைவில் நடைபெற உள்ள போராட்டத்தில் இந்த குழு பங்கேற்கும். அதேபோல் ஹைட்ரோ கார்பன் எடுப்பதை எதிர்த்து இந்த குழுவினர் விரைவில் போராட்டம் நடத்துவர் என்றார்.