அரிச்சந்திராநதி கரையோரத்தில் குடியிருப்பவர்களுக்கு மாற்று குடியிருப்புக்கான நடவடிக்கையை விரைவுப்படுத்தக் கோரி ஏப்.26-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தலைஞாயிறு பகுதியில் செல்லும் அரிச்சந்திராநதி ஆற்றின் வடிகால் பகுதியில் இயக்கு அணை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், ஆற்றின் கரைகள் பலப்படுத்தப்படவுள்ளது. இதையடுத்து, இந்த நதிக்கரையோரத்தில் குடியிருப்பவர்களை வேறு இடத்தில் குடி அமர்த்தவும், மாற்று குடியிருப்புகளை ஏற்படுத்தித்தரவும் திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான நடவடிக்கைகள் சுணக்க நிலையில் உள்ளது. இந்நிலையில், அரிச்சந்திராநதியின் கரையோரத்தில் குடியிருப்போர் உரிமை பாதுகாப்பு குழுவின் அமைப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், குடியிருப்புகளை அகற்ற பணமாக வழங்கப்பட்டால் சந்தை மதிப்பைவிட 2 மடங்கு கூடுதலாக வழங்க வேண்டும், வீடுகள் கட்டிக்கொடுக்க திட்டமிட்டால் மாற்று இடங்களை அருகாமையிலேயே தேர்வு செய்து தனித்தனி வீடுகளாக கட்டிக் கொடுக்க வேண்டும், கணக்கெடுப்பில் விடுபட்டவர்களை சேர்க்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், குடியிருப்புக்கான மாற்று திட்டத்துக்காக 2.9.2016-இல் ஒப்பந்தம் செய்யப்பட்டும் அதற்கான பயனாளிகள் குழு அமைக்காததைக் கண்டித்தும், பணிகளை விரைவுப்படுத்தக் கோரி ஏப்.26-ஆம் தேதி பிரிஞ்சிமுனை பொதுப்பணித்துறை அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக , ஒருங்கிணைப்பாளராக சோமு. இளங்கோ, நிர்வாகக் குழு உறுப்பினர்களாக எஸ்.எம்.கே. பெருமாள், சி. பன்னீர் செல்வம், ஏ. ஜெயபால், ஏ. சொக்கலிங்கம், வி. குருமூர்த்தி ஆகியோர் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.