கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பால், சீர்காழி நகராட்சி பகுதியில் கடந்த 7 நாள்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்குள்பட்ட பகுதிகளுக்கு கொள்ளிடம் ஆற்றில் சித்தமல்லி என்ற பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அதன்மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், சீர்காழி புறவழிச் சாலையில் கோயில்பத்து பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், கடந்த 7 நாள்களாக சீர்காழி நகராட்சிப் பகுதியில் குடிநீர் வினியோகம் தடைப்பட்டுள்ளது.
எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படாமலிருக்க, தரமான குழாய்களை பதிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.