வேதாரண்யம் அருகே நடந்து சென்ற மூதாட்டி சைக்கிள் மோதி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
தகட்டூர் சுப்பிரமணியன்காடு பகுதியைச் சேர்ந்தவர் வேதையன் மனைவி வைரம் (70). இவர், தகட்டூர் கடைவீதியில் உள்ள உறவினர் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே அடையாளம் தெரியாதவர் ஓட்டிச் சென்ற சைக்கிள் வைரம் மீது மோதியது.
இதனால், கீழே விழுந்து பலத்தகாயமடைந்த வைரத்தை, திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வைரம், அங்கு சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து, வாய்மேடு காவல் ஆய்வாளர் கண்ணையன் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.