நாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்கள் தரப்பில் 214 மனுக்கள் அளிக்கப்பட்டன.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றன. இக்கூட்டங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வ. முருகேசன் தலைமை வகித்தார். மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 22 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 192 மனுக்களும் என மொத்தம் 214 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒருவார காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய பதிலை தெரிவிக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.