குற்ற நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில், குற்ற நிகழ்வுகளில் ஈடுபடுவோரின் விவரங்களை உள்ளடக்கிய புதிய ரெளடிகள் பட்டியலை மாவட்டக் காவல் துறை தொடங்கியுள்ளது.
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக அண்மையில் பதவியேற்ற செ. விஜயகுமார், சாராயத் தடுப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இதன்படி, சாராயத் தடுப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்தொடர்ச்சியாக, மாவட்டத்தில் குற்ற நிகழ்வுகளில் ஈடுபடுவோரின் அனைத்துப் பதிவுகளையும் பதிவு செய்து, அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கும் வகையில், புதிய ரெளடிகள் பட்டியலைத் தயாரிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் அண்மையில் உத்தரவிட்டார்.
இதன்படி, நாகை மாவட்டத்தில் 16 ரெளடிகளின் அனைத்து விவரங்களையும் கொண்ட புதிய ரெளடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களின் நடவடிக்கைகள் காவல் துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.