நாகை சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
பள்ளியின் முன்னாள் மாணவரும், பன்னாட்டு மனித உரிமைகள் ஆணையத்தின் தூதருமான அசன் முகமது ஜின்னா தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் இணைந்து அமைத்த மனிதம் வெல் அறக்கட்டளை மூலம், 6 மாணவர்களுக்குப் பள்ளிக் கட்டணம், 11 மாணவர்களுக்குச் சீருடை, 5 மாணவர்களுக்குப் புத்தகப் பை, மாணவ, மாணவியருக்கு நீட் தேர்வு பயிற்சி கையேடுகள் ஆகியன வழங்கப்பட்டன.
அறக்கட்டளைத் தலைவர் சுதிர், பள்ளித் தாளாளர் மணவாளன், உதவி குரு பிரபாகரன், பள்ளி முதல்வர் தனராஜ், உதவித் தலைமை ஆசிரியை பிரியபாலா ஆகியோர் பேசினர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் முன்னாள் மாணவர்கள் பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் பள்ளிப் பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.