நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இளைஞர் ஒருவரை கடத்திய வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த 3 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
தேத்தாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் எழிலரசன் (30). இவர், மலேசியாவில் வேலை பார்த்தபோது அங்கிருந்த சிலரிடையே பணம் கொடுத்து வாங்கியது தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனிடையே, சொந்த ஊர் திரும்பிய எழிலரசன், தென்னம்புலம் கிராமத்தில் உள்ள தனியார் மெடிக்கல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு மெடிக்கலில் இருந்த அவரை வேட்டைக்காரனிருப்பு பகுதியைச் சேர்ந்த சிலர் காரில் கடத்திச் சென்று, பின்னர் தோப்புத்துறையில் விடுவித்துச் சென்றனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், கரியாப்பட்டினம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக, வேட்டைக்காரனிருப்பு கிராமத்தைச் சேர்ந்த ரா. கலுவன் (27), பெ. செந்தில் (எ) இளவரசன் (28), ராஜா (எ) வீரமுருகன் (39) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.