மருத்துவம் சார்ந்த தனியார் கல்வி நிறுவனங்கள், தங்கள் கல்வி நிறுவனத்துக்கான அனுமதி ஆணைகளின் நகல்களை பிப். 28-ஆம் தேதிக்குள் சுகாதாரத் துறையில் சமர்ப்பிக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) வ. முருகேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : நாகை மாவட்டத்தில் உள்ள மருத்துவம் சார்ந்த தனியார் கல்வி நிறுவனங்கள், செவிலியர் பயிற்சிப் பள்ளிகள், கல்லூரிகள் தங்கள் கல்வி நிறுவனத்துக்குப் பெற்ற அனுமதி ஆணைகளை நாகை, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் பிப். 28-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி நிறுவனத்துக்கான அனுமதி ஆணைகள், அரசு ஆணை, மருத்துவக் கல்வி இயக்குநர் அல்லது மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரின் ஆணை, கல்வி நிறுவன கட்டட உறுதித் தன்மை சான்று நகல், கட்டட வரைபடம், தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்று ஆகியவற்றின் நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டும். உரிய ஆணைகளை அளிக்காத மருத்துவம் சார்ந்த தனியார் கல்வி நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.