நாகை மாவட்டம், திருமருகல் அருகே உள்ள திருச்செங்காட்டாங்குடி அருள்மிகு சீதள மாரியம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி, அம்பாள் வீதியுலா மற்றும் அக்னி கப்பரை நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
திருச்செங்காட்டாங்குடி வடக்குத் தெருவில் உள்ளது அருள்மிகு சீதள மாரியம்மன் கோயில். திருச்செங்காட்டாங்குடி உத்திராபதீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான இக்கோயிலில், மகா சிவராத்திரி விழா சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
வேளாக்குறிச்சி ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பராமாசார்ய சுவாமிகள் முன்னிலையில், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை நிகழ்வாக அம்பாள் வீதியுலாவும் நடைபெற்றன. புதன்கிழமை காலையில் அக்னி கப்பரை வீதியுலாவும், கிராமிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
குருவாடியில்....
திருமருகல் அருகே உள்ள குருவாடி அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி, அக்னி கப்பரை வீதியுலா புதன்கிழமை நடைபெற்றது. மருளாளிகளின் முயற்சியால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 20 ஆண்டுகளாகத் தடைபட்டிருந்த அக்னி கப்பரை வீதியுலா நிகழ்ச்சி புதன்கிழமை
நடைபெற்றது.