சீர்காழி அருகே செல்லிடப்பேசி உயர்கோபுரத்தில் ஏறி இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
சீர்காழி அருகேயுள்ள கண்டிராஜநல்லூரைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் ரமேஷ் (35). விவசாயக் கூலித் தொழிலாளி. இவர் கண்டிராஜநல்லூருக்கு அருகே அரசூரில் உள்ள செல்லிடப்பேசி உயர்கோபுர உச்சிக்குச் சென்று அமர்ந்து கொண்டு ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனித் தமிழ்நாடு வேண்டும், தமிழ்நாட்டுக்கு என்று தனி ராணுவம் வேண்டும், தனி ஈழம் வேண்டும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறி கோஷமிட்டார்.
தகவலறிந்த சீர்காழி டிஎஸ்பி சேகர், கொள்ளிடம் ஆய்வாளர் செல்வம், சீர்காழி தீயனைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான அலுவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று செல்லிடப்பேசி உயர்கோபுரத்தில் அமர்ந்திருந்த ரமேஷிடம் சுமுகமாக பேசி கீழே வரவழைத்து அவரை கைது செய்தனர்.