குத்தாலம் வட்டம், ஸ்ரீகண்டபுரம் குட்லக் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவர் ஆதிராகுல் தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் முதலிடம் பெற்றதையடுத்து, பள்ளியில் அவருக்கு வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் சார்பில், பெரம்பலூரில் நடைபெற்ற 14 வயதுக்குள்பட்ட மாநில அளவிலான எறிபந்து போட்டியில் ஆதிராகுல் முதலிடம் பெற்றார்.
பின்னர், தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் தமிழ்நாடு சார்பாக விளையாட ஜனவரி மாதம் 3 நாள்கள் நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்றார்.
பிப்ரவரி முதல் வாரத்தில் கர்நாடக மாநிலம், மைசூரில் நடைபெற்ற தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் முதலிடம் பெற்றார்.
இந்நிலையில், மாணவர் ஆதிராகுலை பள்ளியின் தாளாளர் நஜீர் அகமது, முதல்வர் முத்து. முருகேசன், இணை முதல்வர் இளையராஜா, துணை முதல்வர் முரளி, உடற்கல்வி ஆசிரியர்கள் உதயகுமார், மணிமாறன் மற்றும் ஆசிரியர்கள் வியாழக்கிழமை பாராட்டினர்.