காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, மத்திய அரசை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த, இந்து மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் கொள்ளிடம் ஜெ. சுவாமிநாதன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டியது அவசியத் தேவையாகும். நீரின்றி கருகி வரும் பயிர்களைப் போல விவசாயிகளின் வாழ்க்கையும் கருகி வருகிறது. வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் மோசமான நிகழ்வுகள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
எனவே, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதோடு தமிழகத்துக்கு வர வேண்டிய நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். பாலாறு- தென்பெண்ணை- காவிரி- வைகை உள்ளிட்ட மாநிலத்துக்குள் ஓடும் நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
ஆறுகள், குளங்கள், ஏரிகள், கால்வாய்கள், கண்மாய்கள், வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி நீராதாரங்களை மேம்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி, தமிழகத்துக்கான நீர் உரிமைகளில் நீதியை நிலை நாட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி திங்கள்கிழமை (பிப்.26) மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இந்து மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.