தரங்கம்பாடி வட்டம், ஆக்கூரில் செல்லிடப்பேசி கடையில் நிகழ்ந்த திருட்டு சம்பவம் தொடர்பாக 2 பேர் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
ஆக்கூர், காந்தித் தெருவைச் சேர்ந்த முஹம்மது ஹூசைன் மகன் தவ்லத்அலி(33). இவர், அப்பகுதியில் செல்லிடைப் பேசி கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் கடந்த 8-ம் தேதி மர்ம நபர்கள் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 18 புதிய செல்லிடப் பேசிகள், 3 பழைய செல்லிடப் பேசிகள் மற்றும் உதிரிப் பாகங்களைத் திருடிச் சென்றனர். இதுகுறித்து, செம்பனார்கோயில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஆக்கூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (21), நித்தீஸ்(17) ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது என போலீஸார் தெரிவித்தனர். மேலும், ஆக்கூர் நடுநிலைப் பள்ளியில் நடந்த திருட்டிலும் இவர்களுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.