நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த 60 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு அம்மாநில அரசு தடை விதித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மயிலாடுதுறை காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு அமைப்பின் நாகை வடக்கு மாவட்டத் தலைவர் ஏ. குலாம் ஹூசைன் தலைமையில் ஒன்றிணைந்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் ஷோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 60 பேர் ஜார்க்கண்ட் மாநில அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்டச் செயலாளர் எஸ். நவாஸ்கான், எஸ்டிபிஐ கட்சியின் நாகை வடக்கு மாவட்டத் தலைவர் எம்.ஷபீக் அஹமது, பொதுச் செயலாளர் வி.எஸ். கண்ணன், மாவட்ட நிர்வாகிகள் ரபீக், ஜியாவுதீன், முஹம்மது பைசல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர், அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.