மயிலாடுதுறையை அடுத்த திருவிழந்தூரில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள உலோகச் சிலைகள் பாதுகாப்பு மைய வளா.கத்தில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
திருவிழந்தூர் அருள்மிகு பரிமளரெங்கநாதர் கோயிலுக்குச் செந்தமான இடத்தில் இந்து சமய அறநிலையத்துறையினரால் உலோகச் சிலைகள் பாதுகாப்பு மையத்துக்கான புதிய கட்டடம் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த மையத்தின் பாதுகாப்புக் கருதி மைய வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. சுற்றுச்சுவர் அமையவுள்ள இடத்தில் சுமார் 3,500 சதுர அடியில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் எஸ். சிவசங்கரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியின்போது, அருள்மிகு பரிமளரெங்கநாதர் கோயில் செயல் அலுவலர் பா. முருகன், வருவாய் ஆய்வாளர் இளம்பரிதி மற்றும் காவல்துறையினர், கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.