செம்பனார்கோவில் அருகே மேலக்கட்டளை லெட்சுமி நாரயணப் பெருமாள் கோயிலில் போகிப் பண்டிகையையொட்டி சனிக்கிழமை சிறப்பு திருமஞ்சன பூஜை நடைபெற்றது.
செம்பனார்கோவில் அருகேயுள்ள மேலக்கட்டளை லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில், பெருமாள் மகாலெட்சுமியுடன் அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் போகி மற்றும் சனிக்கிழமையையொட்டி சிறப்பு திருமஞ்சன பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, 1,008 மந்திரம் படித்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல், மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோயிலில் சனிக்கிழமையையொட்டி பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, இரட்டை ஆஞ்சநேயர் மற்றும் நாகராஜா சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. அடுத்து, கஞ்சாநகரம் பால ஆஞ்சநேயர் கோயில், பொன்செய் கிராமம் அசைந்தாடும் பால ஆஞ்சநேயர் கோயில், விளநகர் வரதராஜப் பெருமாள் கோயில், ஆக்கூர் ஆதிநாராயணப் பெருமாள் ஆகிய கோயில்களில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து, ஆஞ்சநேயருக்கு வடைமாலை, மலர் மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலைகள் அணிவித்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.