குத்தாலம் வட்டம், வானதிராஜபுரத்தில் சிருங்கேரி சாரதா பீடத்துக்குச் சொந்தமான கோசாலையில் திங்கள்கிழமை கோ பூஜை நடைபெற்றது.
இந்த கோசாலை கடந்த 2006-ஆம் ஆண்டு 5 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்டது. இறக்கும் நிலையில் உள்ள மாடுகள் மற்றும் அடிமாட்டிற்கு விற்கப்படும் மாடுகளை மீட்டு இங்கு பாதுகாத்து வருகின்றனர்.
இங்கு கிடைக்கும் பஞ்சகவ்யம், சாணம் போன்றவை இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
மாட்டுப்பொங்கலையொட்டி, இங்கு கோமாதா பூஜை நடைபெற்றது. இதையொட்டி, பண்ணையில் உள்ள108 மாடுகளுக்கு கரும்பு, சர்க்கரைப் பொங்கல், மூக்கணாங்கயிறு வைத்து பூஜித்தனர். பின்னர், மாட்டுத்தொழுவத்தில் சேந்தங்குடி கிரிசிவாச்சாரியார் சிறப்பு பூஜைகள் செய்தார். பசுக்களுக்கு தீபாராதனை செய்யப்பட்டு பழம், சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டன.
கோசாலை நிர்வாக அறங்காவலர் குருசாமி, அறங்காவலர்கள் ராமமூர்த்தி, அருண், அஸ்வின், குத்தாலம் காவல் ஆய்வாளர் சுகுணா மற்றும் பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.