வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக நான்காவது நாளாக பூம்புகார், வாணகிரி, திருமுல்லைவாசல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தரங்கம்பாடி, பூம்புகார், வானகிரி, கீழமுவர்கரை, திருமுல்லைவாசல், பழையாறு உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் சுமார் 200 விசைப்படகுகள் உள்ளன. இந்த விசைப்படகுகள் முலம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தெற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, மீனவர்கள் மீன்பிடிக்கக்கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக கடந்த சனிக்கிழமை முதல் பூம்புகார், தரங்கம்பாடி, திருமுல்லைவாசல், பழையாறு உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் பலத்த காற்று வீசுகிறது. இதன் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதுகுறித்து பூம்புகார் பகுதி மீனவர்கள் கூறியது:
இந்தாண்டின் தொடக்கத்தில் மீன்பிடித் தொழில் மிகவும் மந்தமானதாகவே காணப்பட்டது. தற்போது தான் அந்த நிலை மாறி தொழில் சூடுபிடித்தது. மீனவர்களின் வலையில் அதிகளவில் மீன்கள் சிக்கின.
இந்த நிலையில், காற்றழுத்ததாழ்வு நிலை காரணமாக கடல் சீற்றம் காணப்படுகிறது.
ஏப்ரல் 15 முதல் ஜீன் 15-ஆம் தேதி வரை இரண்டு மாதங்கள் மீன்பிடித் தடை காலம் தொடங்கவுள்ள நிலையில், தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், மீன்பிடித்தொழில் தடைபட்டது மிகுந்த கவலையளிக்கிறது. இதனால், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்றார் அவர்.
செவ்வாய்கிழமை நான்காவது நாளாக கடல்சீற்றம் காணப்பட்டதால், மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்லவில்லை. கடல் சீற்றம் இன்னும் ஒருவார காலம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.