வானிலை எச்சரிக்கை: ஆழ்கடல் மீன்பிடிப்பைக் கைவிட்டு கரை திரும்பும் மீன்பிடி படகுகள்

வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் இடையே காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, மீன்பிடி படகுகள் ஆழ்கடல் மீன்பிடிப்பை கைவிட்டு கரை திரும்பி வருகின்றன.

வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் இடையே காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, மீன்பிடி படகுகள் ஆழ்கடல் மீன்பிடிப்பை கைவிட்டு கரை திரும்பி வருகின்றன.
இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலின் நடுப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வெள்ளிக்கிழமை உருவானது. இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இதையடுத்து, ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றுள்ள மீன்பிடி படகுகளை உடனடியாக கரை திரும்ப வருவாய்த் துறை மற்றும் மீன்வளத் துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நாகை மாவட்ட மீன்வளத் துறை சார்பில், மீனவக் கிராம பஞ்சாயத்தார்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டு,  ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீன்பிடி விசைப் படகுகள் கரை திரும்ப வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை முதல் மீன்பிடி விசைப் படகுகள் கரை திரும்பத் தொடங்கியுள்ளன. மேலும், கடந்த 2 நாள்களாக நாகை மாவட்ட மீன்வளத் துறை மூலம், விசைப் படகுகளுக்கான மீன்பிடி டோக்கன் வழங்கும் பணியும், மானிய விலையிலான டீசல் விற்பனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாகையிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றிருந்த விசைப் படகுகளில் சுமார் 80 -க்கும் அதிகமான படகுகள் கரை திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற விசைப் படகுகள் கரை திரும்பி வரும் நிலையில்,  தகவல் தொடர்பு நிலைக்கு அப்பால் உள்ள படகுகளுக்கு, கடலோரக் காவல் படை மூலம் தகவல் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com