நாகை மாவட்டம் பெரம்பூர் சரகம் அகரகீரங்குடி கிராமத்தில் மூதாட்டி கொலை சம்பவத்தில், கணவன்- மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
அகரகீரங்குடி கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி பொன்னம்மாள்(60). அதே தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (35). இவரது மனைவி சரிதா(28). இவர்களது மகளைப் பற்றி பொன்னம்மாளின் மகள் பரிமளா அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கடந்த சனிக்கிழமை பொன்னம்மாள் வீட்டுக்கு தமிழ்ச்செல்வன், சரிதா ஆகிய இருவரும் சென்று பரிமளாவிடம் கேட்டனர். அப்போது தகராறு முற்றியதில், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனராம். தகராறின்போது குறுக்கே வந்த பொன்னம்மாள், தமிழ்ச்செல்வன், சரிதா ஆகியோரால் தாக்கப்பட்டு காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். கொலை பிரிவின்கீழ், பெரம்பூர் காவல் ஆய்வாளர் நாகரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து தமிழ்செல்வன், சரிதா ஆகியோரை கைது செய்தனர்.