வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் திறன் பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனப் பயணத்தை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் சார்பில் அளிக்கப்படும் பல்வேறு திறன் பயிற்சிகள் குறித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மின்னணு திரை வாகனம் மூலம் குறும்படம் திரையிடும் பிரசாரம் நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இப்பிரசார வாகன பயணத்தை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தொடங்கி வைத்து, திறன் பயிற்சிக்குப் பதிவு பெற்றவர்களுக்கு அடையாள சீட்டை வழங்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) தெ. பிரகாசம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சி. ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.