எல்லைத்தாண்டிய குற்றத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 இலங்கை மீனவர்கள், நீதிமன்ற உத்தரவுப்படி விடுதலை செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை காரைக்காலிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்.
இந்திய கடலோரக் காவல் படையினர் கடந்த மார்ச் 12-ஆம் தேதி நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கை திரிகோணமலை, அஞ்சான்கட்டை பகுதியைச் சேர்ந்த தனுஷ்கர், மதுரங்கா, ரணில், அருண், டிலான் ஆகியோர் ஒரு படகில், இந்திய கடல் பரப்பில் மீன்பிடிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, எல்லைத்தாண்டிய குற்றத்தின்கீழ் அவர்கள் 5 பேரையும் கைது செய்த கடலோரக் காவல் படையினர், காரைக்கால் தனியார் துறைமுகத்துக்குக் கொண்டு வந்து கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வேதாரண்யம் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 5 மீனவர்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இலங்கை மீனவர்கள் 5 பேரையும் விடுதலை செய்து சென்னை நீதிமன்றம் மே.9-ஆம் தேதி உத்தரவிட்டது. இதன்படி, புழல் சிறையிலிருந்து விடுதலையான மீனவர்கள் 5 பேரும் செவ்வாய்க்கிழமை காலை காரைக்கால் தனியார் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு, கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான அமேயா ரோந்து படகு மூலம் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இலங்கை மீனவர்கள் 5 பேரையும், சர்வதேச கடல் பரப்பில் இலங்கை கடற்படையினரிடம் இந்திய கடலோரக் காவல் படையினர் ஒப்படைத்தனர்.