நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை அரசு உயர்நிலைப் பள்ளி சாரண இயக்க மாணவர்களுக்கு தன்னார்வலர் தம்பதி தமது மகனின் திருமணப் பரிசாக சீருடைகளை வெள்ளிக்கிழமை அளித்து மகிழ்ந்தனர்.
திருவாரூர் மாவட்டம், ஆலத்தம்பாடியைச் சேர்ந்தவர்கள் சங்கர் - சாந்தி தம்பதி. இவர்களது மகனின் திருமணம் அண்மையில் நடைபெற்றது. விழாவில் ஆடம்பர நிகழ்வுக்கான செலவை நிறுத்தியதோடு, அந்த தொகையை பயனுள்ளதாக செய்ய திட்டமிட்டனர். பட்டாசு வெடிப்பதால் பறவைகள், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த மீனவ கிராம மாணவர்கள் படிக்கும் ஆறுகாட்டுத்துறை அரசு உயர்நிலைப் பள்ளியை தேர்வு செய்தனர்.
அங்கு, சாரணர் இயக்கத்தில் 10 மாணவர்களுக்கும், சாரணர் சீருடையை வாங்கி அளித்தனர்.
நிகழ்ச்சியின்போது, தலைமையாசிரியர் சு.வைத்தியநாதன், சாரண இயக்க ஆசிரியர் மு. அண்ணாதுரை, ஆசிரியர்கள் சி.த. செல்லப்பா, க. ஜெயலலிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.