பொறையாறு போக்குவரத்து பணிமனை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான முதலாமாண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், பொறையாறு போக்குவரத்துக்கழக பணிமனையில் கடந்த ஆண்டு அக்.20-ஆம் தேதி ஓய்வறை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஓட்டுநர்கள் காளகஸ்தினாதபுரம் பிரபாகரன், பாலு, மணக்குடி அன்பரசன், மாமாகுடி மணிவண்ணன், பொறையார் தனபால், பெரம்பூர் முனியப்பன், கீழையூர் சந்திரசேகர் மற்றும் நடத்துநர் நாகை ராமலிங்கம் ஆகிய 8 பேர் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்து நிகழ்ந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, சனிக்கிழமை முதலாமாண்டு நினைவஞ்சலி நடைபெற்றது.
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பொறையாறு கடைவீதியிலிருந்து மெளன ஊர்வலமாக அரசுப் போக்குவரத்து பணிமனைக்கு வந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் படத்துக்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் அருட்செல்வன், மாவட்ட துணைச் செயலர் ஞானவேலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.