சீர்காழி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு, கொள்ளிடம், பழையார் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் மழை விட்டுவிட்டு பெய்தது. இந்த மழை சம்பா சாகுபடிக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
குறிப்பாக சீர்காழி, செம்மங்குடி, கொண்டல், மங்கைமடம், காரைமேடு, திருவாலி, திருநகரி, காத்திருப்பு, செம்பதனிருப்பு, எடக்குடி வடபாதி, அகணி, வள்ளுவக்குடி, மாதானம், கற்கோவில், மானாந்திருவாசல், வேட்டங்குடி, ஆரப்பள்ளம், நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நேரடிவிதைப்பு மற்றும் தாளடிநடவு என 25 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்களுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. சீர்காழி நகரில் சாக்கடை வடிகால்கள் முறையாகப் பராமரிக்கப்படாததால், மழைநீருடன், சாக்கடை நீருடன் கலந்து சாலையில் பெருக்கெடுத்தது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
விபத்துக்குள்ளான வேன்: கொள்ளிடத்திலிருந்து சீர்காழி வந்துகொண்டிருந்த வேன், தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் மழையால் சாலையோரம் இறங்கியது. அதிருஷ்டவசமாக அதில் பயணித்தவர்கள் உயிர் தப்பினர்.