உயிர்நீத்த காவர்களுக்கு, காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு வீரவணக்கம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாகை ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பணிக் காலத்தின்போது, வீரமரணமடைந்த காவலர்களுக்கு மரியாதை செய்யும் வகையில், ஆண்டுதோறும் அக்.21-ஆம் தேதி காவலர் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நிகழாண்டு காவலர் நினைவு தினத்தையொட்டி, நாகை மாவட்டக் காவல்துறை சார்பில், உயிர்நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் பங்கேற்று, காவலர் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, பணிக் காலத்தின்போது, வீரமரணமடைந்த காவலர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர், மெளனஅஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் காவல் துணைக் கண்காணிப்பாளர் சதீஷ்குமார், ஊர்க்காவல் படை மண்டல தளபதி ஆனந்த், காவல் ஆய்வாளர்கள் செந்தில் குமார், சிவப்பிரகாசம் உள்ளிட்ட காவல் துறையினர் பங்கேற்றனர்.