நாகை மாவட்டம், ஆக்கூரில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கிளைச் செயலாளர் தவ்பிக் அஹமது தலைமை வகித்தார். பொருளாளர் முக்தார், துணைச் செயலாளர்கள் சல்மான், முகம்மது சகின், மாணவர் இந்தியா அமைப்பின் செயலாளர் அமிருல் அஸ்லம், மருத்துவரணி செயலாளர் ஜஸ்வத் அஸ்லம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் ஷாஜஹான் கலந்துகொண்டு, கட்சியின் பூர்த்தி செய்யப்பட்ட உறுப்பினர் சேர்க்கை படிவத்தைப் பெற்றுக்கொண்டார். ஆக்கூர் கிளை தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக ஜஸ்பர், இளைஞரணி செயலாளராக நஸ்ருல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்: மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. காவிரி சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மழை காலத்தை முன்னிட்டு ஆறு, ஏரி, கால்வாய்களில் தூர்வாரப்படாத இடங்களைத் தூர்வாரி, மழைநீரை முறையாக சேமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.