நாகை மாவட்டம் மயிலாடுதுறை நுகர்வோர் மொத்த கூட்டுறவு விற்பனை பண்டக சாலையில், தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு விற்பனை நிலையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
மயிலாடுதுறை நாராயணப்பிள்ளை தெருவில் இயங்கிவரும்,நுகர்வோர் மொத்த கூட்டுறவு பண்டக சாலையில்,ஆண்டுதோறும் பட்டாசு விற்பனை நிலையம் திறக்கப்பட்டு, குறைந்த விலையில் பட்டாசு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. நிகழாண்டுக்கான தீபாவளி பண்டிகை பட்டாசு விற்பனை நிலையத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மாயூரம் கூட்டுறவு நகர வங்கித் தலைவர் விஜிகே.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,தொகுதி எம்எல்ஏ வீ.ராதாகிருஷ்ணன் பங்கேற்று பட்டாசு விற்பனை நிலையத்தைத் திறந்து முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பண்டகசாலை கண்காணிப்பாளர் மரியஅந்துவம், முன்னாள் தலைவர் எஸ்.அலி, துணைத் தலைவர் அருணாச்சலம், இயக்குநர் செல்வசேகரன் மற்றும் சங்கப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.