மேலப்பாதி இரட்டை ஆஞ்நேயர் கோயிலில் ஆவணி மாத அமாவாசையையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
செம்பனார்கோவில் அருகேயுள்ள மேலப்பாதி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இரட்டை ஆஞ்சநேயர் கோயிலில், ஒரே கருவறையில் 2 ஆஞ்சநேயர் எழுந்தருளி கிழக்கு திசையில் பூம்புகார் கடற்கரையை நோக்கி அருள்பாலித்து வருவது சிறப்பாக போற்றப்படுகிறது. இதனால், இங்கு வந்து வழிபடுவோருக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். பல்வேறு சிறப்புகளுடைய இக்கோயிலில் ஆவணிமாத அமாவாசையொட்டி ஆஞ்சநேயருக்கு மஞ்சள் பொடி, திரவிய பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், பழச்சாறு இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, வடைமாலை, துளசி மாலை, மலர் மாலை, வெற்றிலை மாலை, எலுமிச்சை பழ மாலை, வாழைப்பழம் மாலை, லட்டு மாலை ஆகிய மாலைகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து அர்ச்சனை செய்யப்பட்டது.