பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்: நாகை மாவட்டத்தில் 10 இடங்களில் மறியல் போராட்டம் 500-க்கும் அதிகமானோர்  கைது

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் நாகை மாவட்டத்தில் 10 இடங்களில்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் நாகை மாவட்டத்தில் 10 இடங்களில் மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற 500-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். 
பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாவட்டத்தில் 10 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றன.
நாகை...
நாகை, தலைமை அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அ. சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வி.மாரிமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.டி. பகு, பி.கே. ராஜேந்திரன், நகரச் செயலாளர் எம். பெரியசாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் சீனி. மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பொருளாளர் வி. ராமலிங்கம், ஒன்றியச் செயலாளர்கள் ஜி. பாண்டியன், ஆர்.கே. பாபுஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
கீழ்வேளூர்...
கீழ்வேளூர் அஞ்சல் அலுவலகம் முன்பாக நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் எம்.கே. நாகராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய நிர்வாகிகள், விவசாய சங்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்களை கீழ்வேளூர் போலீஸார் கைது 
செய்தனர். 
கீழையூர்...
கீழையூர் அஞ்சல் அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.முருகையன் தலைமை வகித்தார்.  மார்க்சிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர். முத்துப்பெருமாள், த. லதா,  கீழையூர் ஒன்றியச் செயலாளர் எம். முருகையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
திருக்குவளை...
கீழையூர் ஒன்றியம், திருக்குவளை அஞ்சலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு கட்சியின் கீழையூர் ஒன்றியச் செயலாளர் டி. செல்வம் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் வி. பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் டி. கண்ணையன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் வி. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
சீர்காழி...
சீர்காழி தலைமை அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.வி.ஆர். ஜீவானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம். செல்லப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலாளர் வி.எஸ். தமிழ்வேந்தன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ஜி. செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளர் எம். பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செம்பனார்கோவில்...
செம்பனார்கோவில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பாக நடைபெற்ற மறியலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி. சீனிவாசன், ஏ.வி. சிங்காரவேலன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி. சிம்சன், ஜி. கலைச்செல்வி, டி. ராசையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொறையாறு...
பொறையாறு அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற மறியலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பாஸ்கரன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை...
மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற மறியலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பொருளாளர் இரெ. இடும்பையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். துரைராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்...
வேதாரண்யம் அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற மறியலில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர்  சிவகுருபாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் நாராயணன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் மாரியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வி. அம்பிகாபதி, மாவட்டக்குழு உறுப்பினர் மா. முத்துராமலிங்கம், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் ஏ. வெற்றியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
தலைஞாயிறு...
தலைஞாயிறு அஞ்சல் அலுவலகம் முன்பாக நடைபெற்ற மறியலுக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வி. சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் எஸ். சம்பந்தம் ஆகியோர் தலைமை வகித்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஏ. வேணு, கே. அலெக்ஸாண்டர், ஏ. ராஜா, பி. பாப்பாத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மகேந்திரன், எம். ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
மறியல் போராட்டங்களில் பங்கேற்ற 500-க்கும் அதிகமானோரை போலீஸார் கைது செய்து, மாலையில்  விடுவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com