நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் 3 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.
மின்னணு மடக்குக் குச்சி கோரி விண்ணப்பித்த சுப்பிரமணியன் என்பவரின் மனுவை உடனடியாக பரிசீலித்த ஆட்சியர், அவருக்கு மின்னணு மடக்குக் குச்சியை வழங்கினார். பின்னர், 2 மாற்றுத் திறனாளிகளுக்கு முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 88 ஆயிரம் மதிப்பில் நவீன செயற்கை கால் உபகரணங்களையும், பணியின் போது இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகள் 3 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனை ஆணைகளையும் ஆட்சியர் வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீர்வுக் கோரியும் பொதுமக்களிடமிருந்து 117 மனுக்களும், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்திலிருந்து 6 மனுக்களும் பெறப்பட்டு தொடர்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலர் வ. முருகேசன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் எம். வேலுமணி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஆர். விக்டர் மரிய ஜோசப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.