நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் புத்தகக் கடை உரிமையாளரை வீடு புகுந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தில் மேலும் 4 பேரை மயிலாடுதுறை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
மயிலாடுதுறை வட்டம், சேந்தங்குடி துர்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் து. ரமேஷ் (47). மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலைய பகுதியில் புத்தகக் கடை நடத்தி வரும் இவர், வார இதழ் ஒன்றின் முகவராகவும் பணியாற்றுகிறார்.
இந்நிலையில், கடந்த 9-ஆம் தேதி இரவு ரமேஷ் தனது வீட்டில் இருந்தபோது, ஆயுதங்களுடன் வந்த கும்பல், அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததுடன், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திவிட்டு, தப்பியது.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிந்து சேந்தங்குடி துர்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாபு (42), தில்லைநகரைச் சேர்ந்த ந. கார்த்திகேயன் (47) ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மயிலாடுதுறை வள்ளலார் கோயில் தெருவைச் சேர்ந்த பா. சூர்யா (24), ரா. சபரிநாதன் (24), பூக்கொல்லை வடக்கு யாதவர் தெருவைச் சேர்ந்த பா. மணிகண்டன் (24) மற்றும் சேந்தங்குடி அப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த ர. முத்து (24) ஆகிய 4 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.