நாகை மாவட்டம், சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு வட்டத் தலைவர் ஆர். நாகராஜன் தலைமை வகித்தார். 40 சதவீத ஊனம் உள்ளவர்களுக்கு உதவித்தொகை வழங்க அரசு ஆணை பிறப்பித்தும் இதுநாள் வரை வழங்கப்படவில்லை, நூறு நாள் வேலை திட்டத்தின்கீழ், மாற்றுத் திறனாளிகளுக்கு 224 நாள்கள் வழங்கப்படாமல் இருக்கும் ஊதியத்தை வழங்க வேண்டும், கடும் ஊனமுற்றவர்கள் பட்டியலில் இடம்பெற்றோருக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் முழக்கமிட்டனர்.
இதில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கணேசன், நிர்வாகிகள் ஜீவானந்தம், நீலமேகம், நடராஜன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.