நாகை மாவட்டம், குத்தாலம் ஒன்றியத்தில், 4 ஊராட்சிகளில் சமூகத் தணிக்கை சிறப்பு கிராமசபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பண்டாரவாடை ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் வட்டார வள அலுவலர் வெங்கட்ராஜீலு கலந்துகொண்டு, 2017-18-ஆம் ஆண்டில் ரூ.45 லட்சம் செலவில் செய்யப்பட்ட 5 பணிகளின் தணிக்கை பதிவேடுகள், அளவீடு புத்தகங்கள் உள்ளிட்ட விவரங்களை வாசித்து, பொதுமக்களின் பார்வைக்கு வைத்தார். மேலும், பொதுமக்களிடமிருந்து புதிய வேலை அட்டை உள்ளிட்ட 18 மனுக்கள் பெறப்பட்டன.
இதேபோல், மாதிரிமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில், வட்டார வள அலுவலர் ஆரோக்கியராஜ் பங்கேற்று, ரூ.13 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்ட 5 பணிகளின் தணிக்கை பதிவேடுகள், அளவீடு புத்தகங்கள் உள்ளிட்ட விவரங்களைப் பொதுமக்களின் பார்வைக்கு வைத்தார். புதிய வேலை அட்டை உள்ளிட்ட 15 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இது தவிர அரிவளூர், கோடிமங்கலம் ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.