செப். 2-ஆம் தேதி குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பிரவேசம் செய்வதையொட்டி, வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலில் உள்ள குருபகவானுக்கு, முதல் கட்ட லட்சார்ச்சனை விழா ஆக. 23-ஆம் தேதி தொடங்குகிறது.
இக்கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிறப்புடையது. குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில், குருபெயர்ச்சி விழா இக்கோயிலில் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு, செப். 2-ஆம் தேதி குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பிரவேசம் செய்கிறார். குருபெயர்ச்சியை முன்னிட்டு, குருபகவானுக்கு முதல் கட்ட லட்சார்ச்சனை ஆக. 23 முதல் 31 வரை நடைபெறுகிறது.
குருபெயர்ச்சிக்குப் பின்னர், இரண்டாவது கட்ட லட்சார்ச்சனை விழா செப். 7 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. லட்சார்ச்சனை காலை 9 முதல் பகல் 12 மணி வரையும், பின்னர் மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறுகிறது.
ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், மீனம் மற்றும் இதர ராசிக்காரர்கள் லட்சார்ச்சனையில் பங்கேற்கலாம். லட்சார்ச்சனை கட்டணம் ரூ. 400 ஆகும். லட்சார்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அருள்மிகு குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்படும்.
தபால் மூலம் லட்சார்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்கள் தங்களுடைய பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரம், லக்னம் ஆகிய முழு விவரங்களுடன் மணியார்டர் அல்லது டிமாண்ட் டிராப்ட் எடுத்து உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில் (குருபரிகார ஸ்தலம்) ஆலங்குடி-612801, வலங்கைமான் வட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி பிரசாதம் பெற்றுக்கொள்ளலாம்.
விழா ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் பா. கலைச்செல்வி, அறநிலைய உதவி ஆணையர் மற்றும் கோயில் தக்கார் செ. சிவராம்குமார் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.