சிறுபான்மையினர் துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டுமென தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு வலியுறுத்தியுள்ளது.
திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் நடைபெற்ற கோரிக்கை விளக்க தொடர் முழக்கப் போராட்டத்தில், சிறுபான்மை நலத்துறையை தனித்துறையாக மாற்றி தனிஅமைச்சகம் உருவாக்க வேண்டும். தமிழக சிறைகளில் விசாரணையின்றியும் பாரபட்சமாகவும் நீண்டகாலம் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.
முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ அமைப்புகளிலிருந்து புதிய வழிபாட்டு தலங்களை கட்டுவதற்கோ அல்லது ஏற்கெனவே உள்ளதை புனரமைக்க மற்றும் பழுதுபார்க்க வந்துள்ள மனுக்களின் மீது விரைவு நடவடிக்கை மேற்கொண்டு அனுமதி வழங்க வேண்டும். முஸ்லிம் மகளிர் நல சங்கங்களுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து அந்த அமைப்பை மாதம்தோறும் அழைத்து மேம்பாட்டு திட்டங்களை அமலாக்க
வேண்டும்.
கல்லறை தோட்டங்களுக்கு நிலம் வழங்க வேண்டும். மதநல்லிணக்க குழுவை நிரந்தரமாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட தொழில்மையம் மற்றும் அரசு திட்டங்களில் சிறுபான்மை மக்களுக்கான பயன்கள் முழுமையாக கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல்லில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் திறக்காமல் உள்ள திப்பு சுல்தான் மணி மண்டபத்தை உடனடியாக திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட தலைவர் அக்பர்தீன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், இணைச் செயலர் ராஜ், துணைத் தலைவர் ஜாகிர் உசேன், இணைச் செயலர் நூர்முகமது, மாவட்டச் செயலர் எஸ். ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.