கூத்தாநல்லூர் வட்டத்தில் கடுஉருட்டி ஆற்றை தூர்வார வலியுறுத்தி, அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் கமலாபுரத்தில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருவாரூர்- மன்னார்குடி பிரதான சாலையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் சேந்தங்குடி சி.டி.எஸ். நடராஜன், டீ. சமரசம், குலமாணிக்கம் ஆர்.பால்ராஜ், மாவட்டக்குடி ஆர். ராஜேந்திரன், மணக்கரை பி.கே.எஸ். ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். இப்போராட்டத்தில், சேந்தங்குடி, புத்தகரம், பொய்கைநல்லூர், மாவட்டக்குடி, லெட்சுமிநாராயணபுரம், கோட்டகம், பாலக்குறிச்சி உள்ளிட்ட 50 கிராமங்களில் நெற்பயிர் நீரில் மூழ்க கடுஉருட்டி ஆறு தூர்வாரப்படாததே காரணம் என்றும், எனவே, அந்த ஆற்றை உடனடியாக தூர்வார வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம். திருஞானம், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ. தங்கவேல், திமுக ஒன்றிய இளைஞரணி கே. கணேசன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சகிலாவீரமணி உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
கூத்தாநல்லூர் வட்டாட்சியர் செல்வி, வெண்ணாறு வடிநில உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் பெ.சுகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்விடத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, கடுஉருட்டி ஆற்றின் 8 கி. மீட்டர் தொலைவுக்கு உடனடியாக தூர்வாரப்பட வேண்டும். மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை பார்வையிட்டு, ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த அதிகாரிகள், கடுஉருட்டி ஆற்றில் 8 கி. மீட்டர் தொலைவுக்கு தூர்வாரும் பணி 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தூர்வாரப்படும் என்றும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள் குறித்து கணக்கெடுத்தபின், நிவாரணம் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பிவைக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதையடுத்து, மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த போராட்டத்தால் அப்பகுதியில் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.