திருவாரூர் மாவட்டம், குடவாசலில் காவல் உதவி ஆய்வாளர்கள் இருவரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, ஒருவர் திருவாரூர் ஆயுதப்படை பிரிவுக்கு வியாழக்கிழமை மாற்றப்பட்டார்.
குடவாசலில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் முருகானந்தம் (53). இதே ஊரில் சிறப்பு உதவி ஆய்வாளராக சேகரன் (53) பணியாற்றி வருகிறார். இருவருக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. தினமும் ஆஜர் அணிவகுப்பில் உதவி ஆய்வாளர் சேகரன் கலந்துகொண்டும், அவர் அணிவகுப்புக்கு வரவில்லை என உதவி ஆய்வாளர் முருகானந்தம் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக புதன்கிழமை இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முருகானந்தம், சேகரனை தாக்கினராம். இதில் காயமடைந்த சேகரன் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
இதனிடையே, குடவாசல் காவல் உதவி ஆய்வாளர் பணியிலிருந்து முருகானந்தம் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டு, திருவாரூர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.