திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரம் அருகேயுள்ள திருக்கொடியலூரில் வரும் 19-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது.
திருக்கொடியலூரில் உள்ளது அகத்தீஸ்வரர் கோயில். இக்கோயில் சனீஸ்வர பகவான் பிறந்த தலமாக கருதப்படுகிறது.
அகத்தியர் சிவபூஜை செய்த தலமாக இருப்பதால், இங்கு வரும் பக்தர்களும், சிவனடியார்களும் ஸ்ரீ சனீஸ்வர பகவானின் கடுமையான பார்வையிலிருந்து நீங்க அகத்தீஸ்வரரே பைரவர் கோலத்தில் ஸ்ரீ சனீஸ்வர பகவானின் எதிரே நின்று தோஷத்தை நீக்கி நற்பலன்களை பெருகச் செய்யும் தலமாக விளங்குகிறது.
ஏழரைநாட்டு சனி, அஷ்டமத்து சனி, சனிதோஷம் இருப்பவர்கள் இவ்வாலயத்தில் இருக்கும் ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு ஹோமம், அபிஷேகம், கருப்பு வஸ்திரம் சாற்றி, தீபம் ஏற்றி, எள் சாதம் நைவேத்தியம் செய்து அர்ச்சனை செய்தால் சகல தோஷங்களும் நீங்கி நன்னை ஏற்படும் என்பது ஐதீகம்.
ஸ்ரீ சனீஸ்வர பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு வரும் 19-ஆம் தேதி காலை 10.01 மணிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். இதையொட்டி, இக்கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.