கொரடாச்சேரி ஏடிஎம் மையத்தில் காவலாளியைத் தாக்கி கொள்ளை முயற்சி

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் வியாழக்கிழமை இரவு ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற இரு மர்ம நபர்கள், பாதுகாவலரைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் வியாழக்கிழமை இரவு ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற இரு மர்ம நபர்கள், பாதுகாவலரைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
கொரடாச்சேரி ரயில்வே கேட் அருகில் உள்ள சிட்டி யூனியன் வங்கி முன்பு ஏ.டி.எம். மையம் செயல்படுகிறது. இந்த வங்கியில் கொரடாச்சேரி வட்டம், தேவர்கண்ட நல்லூரைச் சேர்ந்த சாமிநாதன் (65) பாதுகாவலராகப் பணியாற்றிவருகிறார். இவர், திருவாரூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பின்னர்,  கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பாதுகாவலராகப் பணியாற்றி வருகிறார். 
 இவர், வியாழக்கிமை நள்ளிரவில் பணியில் இருந்தபோது, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள்  ஏ.டி.எம். மையத்துக்கு வந்தனர். அவர்கள், கொள்ளையடிக்க முயற்சிப்பதையறிந்த பாதுகாவலர் சாமிநாதன் அவர்களை தடுத்தார். அப்போது, மர்ம நபர்கள் இருவரும் சாமிநாதனை இரும்புக் கம்பியால் தாக்கினர்.  இதில், சாமிநாதனுக்கு தலை, முகம், கண்ணில் பலத்த காயமேற்பட்டது. 
மர்ம நபர்களால் ஏ.டி.எம். இயந்திரத்திலிருந்து பணத்தை கொள்ளையடிக்க முடியவில்லை. இதனால், அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கொரடாச்சேரி போலீஸார் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, படுகாயமடைந்திருந்த சாமிநாதனை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.  மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வங்கி ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபர்களின் உருவங்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com