மன்னார்குடி காசி விஸ்வநாதர் கோயில், மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரத்தையொட்டி திங்கள்கிழமை இரவு சங்காபிஷேகம் நடைபெற்றது.
திருப்பாற்கடல் தெருவில் உள்ள காசி விஸ்வநாதர்கோயில் பிராகாரத்தில் 108 சங்குகள் வைத்து, அதில் புனிதநீர் தெளித்து, மலர்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. அதன் அருகில் அமைக்கப்பட்டிருந்த ஹோம குண்டத்தில் மங்களப் பொருள்கள் இட்டு யாகம் செய்யப்பட்டது. பின்னர், சங்குகளிலிருந்த புனிதநீர் கொண்டு காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோல், 3-ஆம் தெருவில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவில் பிராகாரத்தில் 1,008 சங்குகளை வைத்து, இதில் புனிதநீர், மலர்களை வைத்து பூஜை செய்து பின் மங்களப் பொருள்கள் இட்டு யாகம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து, சொக்கநாதர், மீனாட்சிக்கு பால், பன்னீர், தயிர் போன்ற திரவியங்களால் அபிஷேக ஆராதனையும், ஹோம குண்டத்தில் வைக்கப்பட்டிருந்த புனிதநீரைக் கொண்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டன.