மன்னார்குடி நுகர்வோர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்க தலைவர் ச.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். தீர்மானங்கள்:
நகர எல்லைக்குள் பிரதானசாலையில் உள்ள திருமண மண்டபங்களில் விழாக் காலங்களில் நிகழ்ச்சி நடைபெறும் போது ஏற்படும் வாகனப் போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து காவல்துறை சரி செய்ய வேண்டும்.
மன்னார்குடி புதிய பேருந்துநிலையத்தில் திறந்தவெளியானது கழிப்பிடமாக மாறி வருவதை நகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும்.
மன்னார்குடி ரயில் நிலையத்தில் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் நடைமேடையை சரி செய்ய வேண்டும். இராவணன் குளம் தென்கரையில் உள்ள கழிவு நீரோடையை அகற்ற வேண்டும்.
அசேசம் ராஜராஜன்நகரில் உள்ள அனைத்து சாலைகளையும் மேம்படுத்த வேண்டும்.
நிகழ்ச்சியில் பொதுச்செயலர் சா.சம்பத், பொருளாளர் ச.நவநீதகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் டி.டாண்யா,பி.குணசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.